மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேதர்நாத் சுக்லா தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக பத்திரிக்கையாளர் கனிஷ்கா திவாரி, அவரது கேமராமேன் இருவரையும் ஆடைகளை களைய வைத்து அரைநிர்வாணப்படுத்தி காவல்துறையினர் அவமானப்படுத்தியுள்ளனர்.
கேதர்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குரு தத் சுக்லாவிற்கு எதிராக போலியான ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவதூறு பரப்புவதாக மேடை நாடக கலைஞர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கனிஷ்கா திவாரி மற்றும் அவரது கேமரா மேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துமீறி நுழைதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள கனிஷ்கா, “சட்டமன்ற உறுப்பினர் குறித்து ஏன் செய்தி வெளியிடுகிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டதாக தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்களை காவல்துறையினர் காவலில் வைத்திருந்ததாகவும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டால், நிர்வாணமான ஊர்வலம் அழைத்து செல்வோம் என்று காவல்துறையினர் மிரட்டியதாகவும் கனிஷ்கா திவாரி கூறியுள்ளார்.
கனிஷ்கா திவாரி, அவரது கேமராமேன் உள்ளிட்ட 8 பேர் உள்ளாடைகளுடன் நிற்பதை காவல்நிலையத்தின் பொறுப்பாளர் அபிஷேக் சிங் பரிஹார் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை மனித உரிமைகள மீறும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.